Tuesday, April 6, 2021

ஓம் மற்றும் நரம்பியல் விஞ்ஞானம்

 ஓம் மற்றும் நரம்பியல் விஞ்ஞானம்

x

 










.... இப்பல்வேறு நிலைகளை, நாம் யோகா மற்றும் நரம்பியல் விஞ்ஞானம் ஆகிய இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். யோக சாஸ்திரத்தில் படைப்பின் தருணத்தில் வெளிப்படுத்தப்பட்ட மூல ஒலி ஓம் என்றுள்ளது. அந்த ஒலியானது, ‘அ’வில் தொடங்கி ‘உ’ ஆகவும், ‘உ’விலிருந்து ‘ம்’ ஆகவும், இறுதியில் ‘ம்’ ஐத் தொடர்ந்து வரும் வெறுமையாகவும், நமது ஆன்மாவினுள் இருக்கும் உள்ளார்ந்த நினைவில் இன்னமும் இருக்கிறது. நாம் வசப்படுத்திக்கொள்ள வேண்டியது ‘ம்’ஐத் தொடர்ந்து வரும் ஒலியற்ற ஒலியினைத்தான். இந்த மூன்று ஒலிகளும், அவற்றைத் தொடர்ந்து வரும் ஒலியற்ற ஒலியும், மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஏனெனில், ஓம் என்னும் ஒலியினைத் தொடர்ந்து வரும் வெறுமையான நிசப்தம், நான்காவது நிலை அல்லது துரிய நிலையை நமக்கு நினைவூட்டுகிறது. உணர்வுறுநிலையின் இந்த நிலைகள் நம் அனைவராலும், அன்றாடம் அனுபவித்து உணரப்படுகின்றன. EEG (Electroencephalogram) எந்திரத்தாலும் கீழ்க்காணும் விதங்களில் இவற்றை அளவிட முடியும்: 

1. எச்சரிக்கையான, விழிப்புடன்கூடிய நிலைகள், உயர் அதிர்வெண்கள் (higher frequencies) கொண்ட மூளை அலைகளால் (brainwaves) குறிக்கப்படுகின்றன: 31 முதல் 120 வரை அதிர்வெண் அலகு (Hertz) கொண்ட காம்மா அலைகள் (Gamma waves), கற்றுக்கொள்ளுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற மூளையின் உயர் நடவடிக்கையின்போது ஏற்படுகின்றன. 13 முதல் 30 வரை அதிர்வெண் அலகு (Hertz) கொண்ட பீட்டா அலைகள் (Beta waves), உரையாடலிலும், பிற நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படுகின்றன. 8 முதல் 12 வரை அதிர்வெண் அலகு (Hertz) கொண்ட ஆல்ஃபா அலைகள் (Alpha waves), நாம் ஓய்வாக, ஆழ்ந்த சிந்தனையில், அழகியதொரு இன்னிசையில் லயித்திருக்கையில், அல்லது தியானம் செய்யத் தொடங்கும்போது ஏற்படுகின்றன.


 2. கனவு நிலையானது, 4 முதல் 7 வரை அதிர்வெண் அலகு (Hertz) கொண்ட தீட்டா அலைகளால் (Theta waves) குறித்துக் காட்டப்படுகிறது. நாம் அரைத்தூக்கத்தில் இருக்கும்போதும், மற்றும் தூக்கத்திற்குள்ளும் கனவுகளுக்குள்ளும் நழுவும்போதும், இது நிகழ்கிறது.


 3. ஆழ் உறக்க நிலையானது, 0.5 முதல் 3 வரை அதிர்வெண் அலகு (Hertz) கொண்ட டெல்டா அலைகளால் (Delta waves) குறித்துக் காட்டப்படுகிறது. விழிப்புடன் கூடிய நிலைகளில், உணர்வுறுநிலையானது, அறிவாற்றலுக்கான தேடுதலில், மூலத்திலிருந்து விலகி வெளிப்புறமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதில் இருந்துதான் நவீன விஞ்ஞானத்துறை பிறக்கிறது.


 மூளை அலைகளின் அதிர்வெண்கள் குறையும்போது, நாம் உள்முகமாகத் திரும்பி, உணர்வுறுநிலையின் அதிக ஆழமான நிலைகளுக்குள் நகர்கிறோம் என்பதை அது காட்டுகிறது. கனவு நிலையின் உணர்வுறுநிலையானது, விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் இடையில் எங்கோ உள்ளது. அங்கு நமக்கு ஸ்லோகங்கள், கவிதைகள், கஜல்கள் போன்றவற்றைப் பற்றிய கற்பனைகள் எழுகின்றன. அது முழுமையாக உள்முகத் தேடலைப் பற்றியது, உள்முக உலகுடன் தொடர்புடையது. ஆழ் உறக்க நிலையில், உணர்வுறுநிலையானது, தன் மூல ஆதாரமான ஆன்மாவினை நோக்கி ஈர்க்கப்படுகின்றது. ஆழ்நிலை தியானம், பல்வேறு புத்த அமைப்புகள் மற்றும் மைண்ட்ஃபுல்னெஸ் போன்ற தியான முறைகளைப் பயிற்சி செய்பவர்கள் மீது, மேலை நாடுகளில் நடத்தப்பட்டு வரும் விஞ்ஞான ஆராய்ச்சி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். துறவிகள், சாதாரண மனிதர்கள்,


 புதிதாக தியானம் செய்பவர்கள் மற்றும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் அல்லது இருபதாயிரம் மணி நேரம் தியானம் செய்திருக்கும், அனுபவசாலிகளைக் கொண்டு அவர்கள் பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளனர். ஆராய்ச்சி முடிவுகளின்படி, தியானம் புரிபவர்களுக்கு பொதுவாக காணப்படும் டெல்டா அதிர்வெண்கள், கனவு போன்ற நிலையின் தீட்டா அதிர்வெண்கள், ஓய்வான ஆல்ஃபா நிலைகள் மற்றும் உயர் அதிர்வெண்களைக் கொண்ட காமா மூளை அலைகளின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை விழிப்பு நிலையுடன் சாதாரணமாக சம்பந்தப்படாத வடிவங்களில் அனுபவித்திருக்கின்றனர். உண்மையில், கிரமப்படி தியானம் செய்யும் யோகிகளிடம், மற்ற குழுவினரைவிட, காமா அலைவுகள் (oscillations) பெரும்பாலும் அதிகமாக இருப்பதாகவும், அலைவீச்சும் (amplitude) குறிப்பிடும்படி அதிகமாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. 


ஆகவே, தியானத்தின் பலனாக, மூளை அலையின் அதிர்வெண்களின் வரம்பு இரு திசைகளிலும் விரிவடைந்துள்ளது. தியானம் செய்துகொண்டிருக்கும் ஒருவர், முற்றிலும் விழிப்புணர்வுடன் இருக்கும் அதே வேளையில், துரிய நிலையின் வரம்பில் உள்ள, டெல்டா அலைகளால் குறிக்கப்படும் ஆழ்ந்த உறக்கம் அல்லது சுஷுப்தி நிலையையும் அனுபவிக்கிறார். யோகிகளும், துறவிகளும் தங்கள் முழுமையான மனவலிமையுடன், இந்த நிலைக்காக ஏங்கித் தவிக்கின்றனர். அதனை அடையும் பொருட்டு, சில நேரங்களில், ஆயிரக்கணக்கான மணி நேரம் தியானம் செய்து, தவமிருந்து பயிற்சி செய்கின்றனர்.


 பிராணாஹுதியின் உதவியுடன், இந்த துரிய நிலையை அனுபவித்து உணர்வது முற்றிலும் எளிதானதாக ஆகிறது. உங்கள் வாழ்நாளில், நீங்கள் ஒருபொழுதும் தியானமே செய்திராவிட்டாலும், பிராணாஹுதியுடன் கூடிய இதயநிறைவு தியானத்திற்கு நீங்கள் அறிமுகப்படுத்தப்படும்பொழுது, துரிய நிலையில் நீங்கள் விரிவடையும் வண்ணம் உங்கள் உணர்வுறுநிலை, வேறொரு மட்டத்தில் விழிப்படைகிறது. உங்கள் உடல் முழுமையாக ஓய்வடைந்திருக்கும்போது, உங்கள் மனம் விஷயங்களை கிரகித்துக்கொள்கிறது. நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கவில்லை, ஆயினும் ஆழ்ந்த உறக்கத்தைப்போல, புத்துணர்ச்சியூட்டுகின்ற ஒரு ஓய்வான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். அதுவே உண்மையான துரிய நிலை.


 பின்னர், நமது அன்றாட வாழ்க்கையில் கண்கள் விழித்திருக்கும் போதும், இந்த நிலையை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் துரிய நிலையைக் கடந்து துரியாதீத் நிலைக்குச் செல்கிறோம். துரிய நிலையானது, நாம் தியானத்தில் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும் ஒன்று. அந்த ஆழ்ந்த தியான நிலையை எல்லா நேரங்களிலும் நமக்குள் நிலையாகக் கொண்டிருக்கும்போது, துரியாதீத் நிலை வெளிப்படுகிறது. ‘அ’, ‘உ’, ‘ம்’ மற்றும் ஒலியற்ற ஒலி ஆகிய எல்லா நிலைகளையும் அது கொண்டுள்ளது. ‘அ’ என்னும் வெளிப்புற விழிப்பு நிலையைக் கடந்து, ‘உ’ என்னும் உள்முக கனவு போன்ற நிலைக்கும், பின்னர், ‘ம்’ என்னும் சுஷுப்தியின் ஆழ் உறக்க நிலைக்கும், பின்னர், துரிய நிலையின் ஒலியற்ற நிசப்தத்திற்கும், பின்னர், இறுதியாக துரியாதீத் நிலைக்கும் நாம் செல்கிறோம். 


ஆகவே, கிரமப்படி ஈடுபாட்டுடன் தியானம் செய்வது நல்லது என்றபோதிலும், எல்லா நேரங்களிலும் தியான நிலையுடன் இருப்பது இன்னும் மேலானது. தினந்தோறும் காலையில் நாம் ஈடுபாட்டுடன் தியானம் செய்கிறோம். மற்றும் எல்லாநேரங்களிலும் தியான நிலையுடன் செயல்படுகிறோம். உண்மையில், நமது கண்களை மூடி, பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதைத் தவிர, நாம் அதிகமாக வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

#மேதகு கம்லேஷ் தே படேல் விதியை வடிவமைத்தல்...

Learn to meditate heartfulness meditation through HeartsApp anywhere anytime Free

Click here to Try Heartfulness Meditation on your own and see how you

feel. http://www.heartfulness.org/

Or you may find nearby Heartfulness meditation centres and trainers at www.heartspot.heartfulness.org 


Heartsapp- android app

 https://play.google.com/store/apps/details?id=com.hfn.unified

 



உங்கள் பிரதிகள் பெற அணுகவும்.

https://www.amazon.in/dp/9388689585/ref=cm_sw_r_cp_awdb_imm_34PZ02AP94HJ80T87ERQ

No comments:

Post a Comment